Skip to main content

பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல், குறியீடுகள் கண்டெடுப்பு

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

 Discovery of Pottery Inscriptions at Pandyan Fort

 

காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல்  குறியீடுகளை சிவகங்கை தொல்படைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா,கள ஆய்வாளர் கா. சரவணன், தலைவர் நா.சுந்தரராஜன்,செயலாளர் இரா.நரசிம்மன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது.

 

''சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புறநானூறு பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை என்னும் பகுதி உள்ளது. புலவர் ஐயூர் மூலங்கிழார் புறநானூற்றுப் பாடலில் கோட்டையின் சிறப்பையும் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான வேங்கை மார்பனை பற்றியும் கோட்டையை வெற்றி கண்ட பாண்டியன் உக்கிரப் பெருவழுதியை பற்றியும் சிறப்பித்து கூறுகிறார்.

 

 Discovery of Pottery Inscriptions at Pandyan Fort

 

அவ்வாறான இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை ஆழமான அகழி மற்றும் நடுவில் நீராவி குளம் ஆகிய சங்க இலக்கிய கோட்டையின் இலக்கண அமைப்போடு அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

 

இன்றும் இக்கோட்டையின் மேற்கு பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோவிலும் தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளன.

 

சங்க கால எச்சங்கள்:

 

சிவகங்கை தொல்நடைக்குழுவினர் தொடர்ந்து இப்பகுதியில்  மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அதில் சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓட்டு எச்சங்கள்,மண்ணால் கல்லால் ஆன உருண்டைகள். வட்டச் சில்லுகள் இவற்றிற்கெல்லாம் முதன்மையாய் மோசிதபன் என்னும்  தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடு ஆகியன கிடைக்கப்பெற்றுள்ளன.

 

பானை ஓட்டு கீறல்கள்  குறியீடுகள்:

 

தற்பொழுது பானை ஓட்டில் கீறல்கள்  குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மூன்று கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன.  இதில் ஒரு குறியீடு ஆங்கில எழுத்தில் இசட் (z) போல் உள்ளது. மற்ற ஒன்று முக்கோண வடிவில் கீழே கால்கள் வரைய ப்பட்டதைப் போல் உள்ளது. மற்றொரு குறியீடு மீன் அல்லது வில்லம்பின் முனை போன்று காணப்படுகிறது.

 

பொதுவாக குறியீடுகள் சிந்து சமவெளி அகழாய்வு முதல் அனைத்து இடங்களிலுமே கிடைக்கின்றன இவை மொழிக்கு முன்னதாக குறியீட்டின் வழி கருத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

 

தமிழி எழுத்திற்கு முந்திய குறியீடுகள்:

 

தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளும் களஆய்வு குழிகளில் முதல் அடுக்குகளில் தமிழி எழுத்துக்களும் அதற்கு பின்னதான அடுக்குகளில் குறியீடுகளும் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர் இதன் வழி தமிழி எழுத்திற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இக்குறியீடுகள் கருதப்படுகின்றன. இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் மற்ற அகழாய்வுத் தலங்களிலும் கிடைத்திருப்பது ஒத்த காலத்தை உறுதிப்படுத்துகிறது.

 

படுக்கைப் பாயின் வடிவமைப்பைக் கொண்ட பானை ஓடு:

 

அழுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழகான வேலைப்பாடுடைய பானைகள் மற்றும் பெரிய அளவிலான பானைகளை வடிவமைத்துள்ளனர். ஒரு பானை ஓட்டின் மேற்பகுதியில் பாயை விரித்து வைத்தால் காணப்படுவதை போன்ற வடிவமைப்புடைய ஓடு ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறான ஓடுகள் தமிழக மட்டுமல்லாது இந்தியா முழுக்க கிடைத்துள்ளன என்பது இத்தொழில்நுட்பம்  பரவலாக இருந்ததை அறிய உதவுகிறது.

 

இன்றும் பயன்பாட்டில் குறியீடுகள்:

 

மக்கள் பழங்காலத்திலிருந்தே குறியீடுகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் தொழில் சார்ந்தும் கருத்தை அறிவிப்பதற்காகவும் குறியீடுகள் பயன்பாட்டில் உள்ளன. சலவைத் தொழில் உள்ளிட்ட தொழில்களிலும் போக்குவரத்து அறிவிப்பு உள்ளிட்டவைகளிலும் குறியீடுகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

 

தொடர்ச்சியாக கிடைக்கும் தொல்லியல் எச்சங்கள்:

 

இக்கோட்டை மேட்டில் சிவகங்கை தொல்நடைக் குழு அவ்வப்போது மேற்கொள்ளும் மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக தொல்லியல் எச்சங்கள் கிடைத்து வருகின்றன.

 

இது குறித்து தொல்லியல் துறை அமைச்சர்  மாண்புமிகு தங்கம் தென்னரசு ஐயாவிடம் வழங்கிய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தொல்லியல் அலுவலரால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அளித்த அறிக்கையின் படி முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற தகவல் சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.

Next Story

தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு‌!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
discovery of the Zamindar inscription of the Ore Pancha period

கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர், கா. சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌. காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த  ஊராகும். இங்குள்ள மும்முடீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்கண்மாய்;

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.

அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்;

சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 03.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தாராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு அமைப்பு;

சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி  அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி;

உ 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்வர்கள்.என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க  ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.

தாது பஞ்சம் காலம்;

1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்ச லட்சண திருமுக விலாசம்;

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.