Skip to main content

750 ஆண்டுகள் பழமையான குலசேகரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

அரசனேரி கீழமேட்டைச் சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, பொருளாளர் ம. பிரபாகரன் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, "சிவகங்கைக்கு மிக அருகில் சூரக்குளம் புதுக்கோட்டை அமைந்திருந்தாலும் அது காளையார்கோவில் வட்டத்தைச் சேர்ந்ததாகும். சூரக்குளத்திலிருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில், தொடர்வண்டி இருப்புப் பாதையின் சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் உள்ள மிகுந்த இடிபாடுடன் கூடிய நான்கு கால் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. சுமார் நான்கரை அடி நீளத்தில் ஒரு அடி அகலத்தில் ஐந்து வரிகளைக் கொண்டதாக இந்தத் துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.

 

கல் மண்டபம்:

சிவகங்கையில் இருந்து சூரக்குளம் வழியாக நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் பழமையான நான்கு கால் மண்டபம் இடிந்த நிலையில் உள்ளது. இது முன்பொரு காலத்தில் இவ்வழியில் செல்வோருக்கு இளைப்பாறும் மண்டபமாகவும் நீர் அருந்தும் இடமாகவும் இருந்திருக்கலாம். இப்பகுதியில் உள்ள காட்டுக்கோவில்கள் நாட்டரசன்கோட்டை மக்கள் வழிபடும் கோவில்களாக உள்ளன. காட்டுக்கோவில்களுக்கு செல்வோருக்கு நீர் வேட்கையைத் தணிக்க இம்மண்டபம் அமைக்கப் பெற்றிருக்கலாம்.

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

குலசேகர பாண்டியனின் கல்வெட்டு:

குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கல்வெட்டு 1275ஆம் ஆண்டு வெட்டப்பெற்றதாகக் கொள்ளலாம்.

 

கல்வெட்டு:

ஸ்ரீ கோமார பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு யாண்டு 5வதின் எதிராவதின் எதிராம் முடிகொண்ட சோழபுரத்து திருச்சிவணமுடைய நாயனார் கோயில் தானத்தார் கோயில் இவ்வூர் உய்யவந்தான் எட்டி உள்ளிட்டார்க்கு எழுத்து வெட்டிக் குடுத்துடம் நாயனாருக்கு இவர்கள் தேவதானமாக விட்டுக் கொடுத்த நிலம் பட்டனவ என உள்ளது.

 

கல்வெட்டுச் செய்தி:

ஸ்ரீகோமார பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவணமுடைய நாயனார் கோவில் தானத்தார் எனும் கோவில் அலுவலர்கள் இவ்வூரைச் சேர்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் இறைவனுக்கு தேவதானமாக விட்டுக்கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது துண்டுக் கல்வெட்டாக உள்ளது.

 

தானத்தார்:

இக்கல்வெட்டில் கோயில் தானத்தார் என வருகிறது. தானத்தார் என்பவர் கோவிலை நிர்வகிப்பதற்காக அரசர்களால் நியமிக்கப்பட்டுவந்துள்ளனர். கோவில் நிர்வாகம், நிலம் தொடர்பான பழமையான பல கல்வெட்டுகளில் தானத்தார் என்கிற சொல் காணப்படுகிறது.

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

முடிகொண்ட சோழபுரம்:

சோழபுரத்தில் ஓட்டை கோவில் மண்டபம் என அழைக்கப்பெறும் 13ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைய சிவன் கோவிலுக்கு அம்மன்னனை அடுத்து வந்த அரசர் காலத்திலும் நிலங்களைத் தானமாக வழங்கப்பட்டதைக் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது மேலும், இக்கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கட்டுமானப் பணிக்காக இங்கு கொண்டுவந்து இக்கல்மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். 745 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.