Skip to main content

பணிவரன்முறையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் விஏஓ... நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

Disabled woman VO affected by work specification ... Thanks in tears to the Collector who took action!

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் விளந்திடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியபிரியா(24). இவர் கடந்த 2018-ல்  டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலராகத் தேர்வு பெற்றார்.  கலந்தாய்வில் இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வாக்கூர் தச்சூர் கிராமத்தில் பணியமர்த்தப்பட்டார். டிஎன்பிஎஸ்சி மூலம் பணிக்கு வந்தவர்களுக்கு ஓராண்டில் பணி வரன்முறை செய்யவேண்டும். இவருடன் பணிக்கு வந்தவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டது.  "இவர் 75 சதவீத கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி, இவர் எப்படி பணி செய்வார்" என்று கருதி கடந்த 2 வருடத்திற்கு மேலாகியும் பணி வரன்முறை செய்யவில்லை. இதுகுறித்து கடந்த 1 வருடத்திற்கு முன் அப்போது பணியில் இருந்த சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் காவியபிரியா. அப்போது, "தங்களை இந்த பணிக்கு வைத்துக்கொள்ளலாமா? என்று வருவாய்த்துறை தலைமை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபிறகு தான் பணிவரன்முறை செய்ய முடியும்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், இதுகுறித்து எந்த விளக்கமும் தெரியவில்லை. அதன்பின்னர் கரோனாவால் காலதாமதம் ஏற்பட்டது.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த 2 வாரத்திற்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக டிஎன்பிஎஸ்சி-க்கும், வருவாய்த்துறை தலைமையகத்துக்கும் பணிவரன்முறை செய்யாமல் இருப்பது குறித்தும் அந்த பெண்ணின் நிலைமையைக் கூறி, விளக்கம் கேட்டுள்ளார். "அவரின் சூழலுக்கு ஏற்ப அலுவலகம் உள்ளிட்ட எந்த பணிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உடனடியாக பணிவரன்முறை செய்துகொடுக்கவேண்டும்" என்று பதில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு பணிவரன்முறை செய்த ஆணையை ஜூலை 26-ந்தேதி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது.

 

''கடந்த 2 ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யாமல் இருந்ததால் எனது சொந்த மாவட்டத்திற்கு இருவழி மார்க்க பணிமாறுதலுக்குச் செல்லமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து மிகவும் வேதனையுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தேன். அவர் 10 நாட்களுக்குள் சரியான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆணையை வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்ணீர் மல்க நன்றியைத் தமிழக அரசிற்கும் சார் ஆட்சியருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்  காவியபிரியா.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.