Skip to main content

தாபா உணவக உரிமையாளர் இரும்பு கம்பியால் அடித்து கொலை; சிக்கிய தொழிலாளி

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Dhaba restaurant owner beaten to passed away with iron rod
கந்தசாமி

 

சேலம் அருகே தாபா உணவக உரிமையாளரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் உடையார்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (60). இவருடைய மகன் நாகராஜ். கந்தசாமி, தனது மகனுடன் அரியானூரில் வசித்து வந்தார். அதே பகுதியில் தேநீர்க் கடை வைத்திருந்தார்.  

 

இந்நிலையில், அரியானூர் குட்டக்காடு பகுதியில் புதிதாக ஒரு தாபா உணவகத்தை குத்தகை எடுத்திருந்தார். உணவகத்தில் உள்ளரங்க வேலைகள், மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையைச் சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோசப் (24) என்பவர் உள்பட 5 தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்த சீரமைப்புப் பணிகள் முடிந்து கடை தொடங்கிய பிறகு ஜோசப் இதே கடையில் வேலையைத் தொடர எண்ணியிருந்தார்.  பகலில் கடையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மாலையில் வீடு திரும்பியதும், கந்தசாமியும், ஜோசப்பும் அங்கேயே படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம்போல் நவ. 23ம் தேதி இரவும் அவர்கள் இருவரும் கடையிலேயே படுத்துக் கொண்டனர்.

 

இந்நிலையில், வியாழக்கிழமை (நவ. 24) அதிகாலை 2 மணியளவில், கந்தசாமியின் மகன் நாகராஜூவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஜோசப், உங்கள் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு பேச்சை துண்டித்துள்ளார். இதனால் என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த நாகராஜூம், உறவினர்களும் தாபா கடைக்குச் சென்று பார்த்தனர். அங்கே கந்தசாமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கொடுத்த ஜோசப் அங்கே காணாததால், அவர்தான் கந்தசாமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

சேலம் புறநகர் டிஎஸ்பி தையல்நாயகி, காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். கந்தசாமியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, ஜோசப் அங்கிருந்து தலைமறைவாகி விட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவருடைய அலைபேசி சிக்னல் மூலம் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.   

 

சம்பவத்தன்று, தாபா கடையில் இருந்த பொருள்களை திருடிச்செல்ல ஜோசப் முயன்றதும், அதை தடுத்தபோது கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  அரியானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.