Skip to main content

வெறிச்சோடிய இருக்கைகளை படமெடுத்த நிருபர்; அவசரமாக முடிந்த பாஜக பொதுக்கூட்டம்

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

A deserted BJP rally-a meeting that ended in haste

 

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியல் சாசன சமர்ப்பண நாள் மற்றும் பஸ்தி சம்பார்க் அபியான் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பட்டியல் அணித் தலைவர் தடா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றுப் பேசினார். மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அகத்தியர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி, மாநில செயலாளர் வினோத் செல்வம், கட்சியின் மாவட்ட தலைவர் மருதையன், மற்றும் சிவ பித்தன் ஈஸ்வர் ராஜலிங்கம், நந்தனார் கல்விக் கழக நிர்வாகி ஜெயச்சந்திரன் மற்றும் ஆன்மீக குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 

இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணாமலை வருகிறார் எனக் கூட்டத்தின் கடைசி நாள் வரை அறிவித்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்திற்குத் தமிழகம் முழுவதிலிருந்தும் பட்டியல் அணி நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதாகவும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறியிருந்தனர். ஆனால் 800 பேர் மட்டுமே வருகை தந்தனர்.

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட்டத்தின் பாதி நேரத்தில் அண்ணாமலை வரவில்லை எனத் தெரிந்ததும் கலையத் தொடங்கினர். வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதில் பாதி இருக்கைக்கு மேல் காலியாக இருந்தது. மேலும் சிறப்புப் பேச்சாளர்கள் பேசும்போது வெறும் 100 பேர் மட்டுமே இருந்தனர். இரவு 8 மணிக்கு 75 சதவீத இருக்கைகள் காலியாக இருந்தது. இதனை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது அங்கிருந்த கட்சியினர் செல்போனை பிடுங்கி படங்களை அழித்தனர். பின்னர் அவர்கள்  நாகரிகமற்ற முறையில் பேசினர்.  

 

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கையில் அமராமல் சுற்றித் திரிந்தனர். இது மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கூட்டம் கலைவதைப் பார்த்த தலைவர்கள் இரவு 8.30 மணிக்கு எல்லாம் கூட்டத்தை அவசரமாக முடித்துக் கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.