நாளை (13.10.2021) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 15ஆம் தேதி வரை மிகக் கனமழையும், 16ஆம் தேதி கனமழையும் பொழிய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பொழியும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், கன்னியகுமாரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், காரைக்கால், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புத்தள்ளதாக அறிவித்துள்ளது.
பரவலாகக் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில், 2வது நாளாக அரியலூரில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. திருமானுரில் 7 சென்டி மீட்டர் மழையும், ஜெயம்கொண்டானில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.