Skip to main content

பாலியல் குற்றவாளிக்கு சாதகம்; காவல் ஆய்வாளர் பதவி இறக்கம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Demotion police inspector who behaved favorably to the criminals

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன்(46). இவரது முதல் மனைவி செல்லதங்கம் இறந்த பிறகு மயிலாடுதுறை கூரநாடு பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த சலாமத் நாச்சியார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவருக்கு 7 வயதில் மகன் உள்ளார். கமாலுதீன் அடிக்கடி சலாமத் நாச்சியார் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததால் அவரைப் பிரிந்து மயிலாடுதுறையில் உள்ள தனது மூத்த சகோதரி நர்கீஸ் பானுவுடன் சலாமத் நாச்சியார் வசித்து வந்தார்.

 

இதனால் கமாலுதீன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக அமிதாபானு(35) என்பவரை திருமணம் செய்தார். இருப்பினும் அடிக்கடி சலாமத் நாச்சியாருக்கு போன் மூலமாகவும், மயிலாடுதுறைக்கு நேரடியாகச் சென்றும் கமாலுதீன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு நாச்சியாரின் மூத்த சகோதரி நர்கீஸ் பானுவுக்கு கமாலுதீன் செல்போனில் வாட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களையும், அருவருக்கத்தக்க வாசகங்களையும் அனுப்பியதாகவும் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நர்கீஸ் பானு வெளிநாட்டில் பணியாற்றும் அவரது கணவர் நஸ்ருதீனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 18_ஆம் தேதி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் நர்கீஸ்பானு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் புகாரை பெற்றுக் கொண்டு கமாலுதீனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் நர்கீஸ்பானுவின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியதாக தெரிகிறது.

 

இதனால் விரக்தியடைந்த நர்கீஸ் பானு தமிழக கவர்னர், முதலமைச்சர், தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம், புதுச்சேரி கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு புகார் கடிதங்கள் அனுப்பினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷாவுக்கு உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா காரைக்கால் நகரப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கமாலுதீன் உள்பட 3 பேர் மீது வழக்கும் பதிந்தார். தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் டி.ஜி.பி மோகன்குமார் லால் உத்தரவுப்படி கடந்த ஆண்டு இன்ஸ்பெக்டர் சிவகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

 

இதில் இன்ஸ்பெக்டர் காவல்துறையின் மீது நம்பகத்தன்மை இழக்கும் வகையிலும், சிசிஎஸ் விதிகள் 1964_ன் படியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை போலீஸ் அதிகாரி என்ற முறையில் தடுக்க தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் கடந்த 2021-22 ஆம் ஆண்டு காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்த காலகட்டத்தில் காவல் நிலையத்தில் புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் காரைக்கால் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட கோர்ட் உத்தரவிட்டது. இதில் 4 பேர் மட்டும் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட நிலையில் 9 பேரும் கையெழுத்து போட்டதாக பதிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து கையெழுத்து இட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி 100 கிராம் அளவுள்ள 13 கஞ்சா பொட்டலங்களுடன் இருவரை சிறப்பு அதிரடிப்படை பிடித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தது ஒப்படைத்தனர்.

 

ஆனால் அவர்களை மேல் அதிகாரி உத்தரவு இல்லாமல் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் சிவக்குமார் விடுவித்துள்ளார். இதன் மூலம் அவர் தனது இன்ஸ்பெக்டர் கடமையில் இருந்து தவறியதோடு ஒழுங்கீனமாகவும் தனது பணியை தவறாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதுவும் காவல்துறை விதிகளுக்கு எதிரானது. இவர் தொடர்ந்து காவல்துறையில் பெரிய பொறுப்புகளில் பணியாற்றுவது சரியானது அல்ல என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் டி.ஜி.பி மனோஜ்குமார் லாலிடம் விசாரணை குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை ஏற்று சிவக்குமாரை இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருந்து விடுவித்து, கீழ்நிலை பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டர் ஆக பதிவிறக்கம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒருவர் தனது தகாத நடவடிக்கைகளாலும், கடமையை செய்ய தவறியதாலும், குற்றங்களை தடுக்க தவறியதாலும் சப்-இன்ஸ்பெக்டராக பதவியிறக்கம் செய்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.