Skip to main content

கோடிக்கணக்கில் மோசடி செய்த டெல்லி தமிழர்கள் - வேலை தேடுபவர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ்.பி.!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Delhi Tamils who cheated millions - SP who gave advice to job seekers

 

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் 15 லட்சம் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த மூன்று பேரை  போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்ஃபோன், கம்ப்யூட்டர், ஏ.டி.எம். கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ஜம்புலிபுத்தூரில் வசிக்கும் மலைச்சாமி மனைவி சாரதா. பட்டதாரியான இவர், வேலை தேடிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது அலைபேசிக்கு வேலை வேண்டுமா என எஸ்.எம்.எஸ். வந்தது. இதை நம்பி கல்வித் தகுதி விவரங்களை சாரதா அனுப்பினார். அவரை தொடர்புகொண்டவர், “டெல்லி ஏர்போர்ட்டில் வேலை செய்கிறேன். இங்கே கிரவுண்ட் ஹேண்ட்லிங் பணிக்குத் தேர்வாகியுள்ளீர்கள். முன்பணமாக ரூ. 2,550ஐ வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து சாரதா பணம்  அனுப்பினார்.

 

பிறகு அசோக், விநாயகமூர்த்தி, ராஜாராம் என்ற பெயர்களில் பேசியவர்கள் பயிற்சி கட்டணம், தங்கும் வசதி, தொழில்நுட்பக் கருவி பெறுவது, சம்பள கணக்கு துவக்கம் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். சாரதா பல தவணைகளில் 15 லட்சத்து 76 ஆயிரத்து 425ரூபாய் வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாள் ஆகியும் வேலை கிடைக்காததால் மோசடி என்பதை உணர்ந்த சாரதா, தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆன்லைனில் புகார் செய்தார். அலை பேசி எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து போலீசார் விசாரித்தனர். போடி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.ஐ.கள் சுல்தான், பாஷா, திவான், மைதீன், சிறப்பு எஸ்.ஐ. துரைராஜ், மணிகண்டன் உள்பட 11 போலீசார் டெல்லி சென்றனர்.

 

அங்கு சகுர்பூரில்  ஊட்டியைச் சேர்ந்த கோவிந்தை பிடித்து விசாரித்தனர். அவர் நேதாஜி சுபாஷ் தினேஷ் என்ற இடத்தில் செயல்படும் கால் சென்டர் நடத்தும் விஜய் ராமச்சந்திரனை அடையாளம் காட்டினர். அங்கு போலி வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டது தெரிந்தது. அங்கிருந்த 31 தொலைபேசிகள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள், போலி நியமன உத்தரவுகள் என 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். கோவிந்த், விஜய் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து தேனிக்கு அழைத்துவந்தனர். விஜய் ராமச்சந்திரனுக்கு நாமக்கல் பூர்விகம்; இரு தலைமுறைகளாக டெல்லியில் வசிக்கின்றனர் .

 

நன்கு தமிழ் பேசும் இவர்கள், தொலைபேசி இணையம் மூலம் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அனுப்பி தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பலரிடம் கோடிக்கணக்கான மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மூவரையும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் தேனி எஸ்.பி. பிரவீன் கூறும்போது, “பொது மக்கள் இதுபோன்ற போலி நிறுவனங்களை நம்பி விவரங்களை அளிக்க வேண்டாம். வேலை வழங்கும் பெரிய நிறுவனங்கள் பணம் வசூலிப்பதில்லை. இணையதள மோசடியில் ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். போலி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் வந்தால் உடனடியாக எங்களுக்குப் புகார் அளிக்கலாம்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.