டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் (Mundka Metro Station) அருகே உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று (13/05/2022) இரவு 09.00 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம், தீயணைப்பு வீரர்கள் வணிக கட்டிடத்திற்குள் சிக்கியுள்ள மக்கள் மற்றும் வணிகர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தீ விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.