Skip to main content

மின் தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்யேக தொலைப்பேசி  எண்... சேவை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021
Dedicated phone number to report electricity related complaints ... Minister who inspected the service center

 

தமிழ்நாட்டில் 3 கோடியே 10 லட்சம் மின் இணைப்புதாரர்கள் உள்ளனர். மின்கட்டணம் தொடர்பான சந்தேகம், புதிய மின் இணைப்பு, லோ ஓல்டேஜ், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்கள் உள்ளிட்ட புகார்கள் தொிவிக்கவும், தகவல்கள் பெற்றிடவும் மின்னகம் என்ற  மின் நுகர்வோர் சேவை மையம் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மையத்திற்கு 94987 94987 என்ற பிரத்யேகமான செல்போன் வாட்ஸ் அப் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் இருந்தும் தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். 24 மணி நேர சேவை நடைபெறும் இம்மையத்தில் 195 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வாட்ஸ்அப் வாயிலாக உடனடியாக சென்று விடும். இந்த மின்னகத்தினை இன்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திடீர் ஆய்வு செய்தார். மின் நுகர்வோர் தொடர்பு கொள்ளும் போது அங்கு பணிபுரிபவர்கள் எவ்வாறு பொறுமையுடன் பதிலளிக்கிறார்கள். தகவல் பரிமாற்றம், சரிசெய்யப்பட்ட பின்பு தொடர்பு கொண்டவருக்கு தகவல் அளித்தல் போன்ற செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மேலும் சிறப்பாக செயல்பட அங்குள்ளவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு'-அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Senthil Balaji's Bail Petition'-Judge Anand Venkatesh ruled

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு கடந்த (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

இருபதாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு; பிப்.19ல் தீர்ப்பா?

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Extension of judicial custody for the twentieth time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

அதே சமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அண்மையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இது தொடர்பான மனு நேற்று (14-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வும் நிறைவு, அனைத்து ஆதாரங்களை தாக்கல் செய்துவிட்டதாக அமலாக்கத்துறை கூறிவிட்டது. வழக்கில் தொடர்புடைய யாரும் யாருடைய வீட்டுக்கும் நேரில் சென்று மிரட்டல் விடுப்பதில்லை. மறைமுகமாக ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால் சிறையில் இருந்தும் கூட ஒருவரால் அச்சுறுத்த முடியும். அமலாக்கத்துறை முன்வைத்த அனைத்து வாதங்களும் செல்லாதவை ஆகிவிட்டன.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுதலாக ஆதாரத்தைப் பதிவு செய்துவிட்டதாக வழக்கு விசாரணையின் போது அது பற்றி விளக்கக் கோருகிறது அமலாக்கத்துறை. தற்போதைய நிலையில், திருத்தப்படாத ஆதாரங்களைக் கொண்டு தங்கள் தரப்பை வாதிட அமலாக்கப் பிரிவுக்கு வழி இல்லை. தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினால், செந்தில் பாலாஜியை விடுவித்தாக வேண்டும். அதனால், 270 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் இன்று நடைபெற்றது. அதில், செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதைப்போல் எந்த ஆவணங்களையும் திருத்தம் செய்யவில்லை. அனைத்து ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுத்தான் செய்தோம். சாட்சி விசாரணையை தொடங்க உள்ளோம் என்ற வாதங்களை அமலாக்கத்துறை வைத்தது.

தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதுவரை இருபதாவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான அமலாக்கத்துறையின் வாதம் இன்று முடிந்த நிலையில், வழக்கு பிப். 19 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்.19 ஆம் தேதி இந்த வழக்கில் ஒருவேளை தீர்ப்பளிக்கப்படலாம்  எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.