Skip to main content

‘அப்பா நான் வீடியோல தெரியுறனா’ - நொடிப்பொழுதில் பறிபோன மகிழ்ச்சி; மனதைக் கணமாக்கும் சம்பவம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியன் கம்பியில் மோதி, கழ்விந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பெங்களூரில் இருந்து சென்னை மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார், மணல் ஏற்றிவந்த லாரி உரிமையாளர்கள் உதவியுடன் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்தில், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

 

Next Story

செல்போனுக்காக வடமாநில இளைஞர் கொலை; பரபரத்த மதுரை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

North State youth incident for cell phone;Madurai

 

இரவு நேரம் சாலையில் நடந்து சென்ற பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்து செல்போன் பறித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு பகுதியில் பீகாரைச் சேர்ந்த சுபேஷ்குமார் மற்றும் சன்னி ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாலை ஓரமாக நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு கும்பல் வடமாநில இளைஞர்களை வழிமறித்து செல்போனை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பைக்கில் வந்த கும்பல் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த சுபேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த சுபேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரவு வேளையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.