கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தூய இருதய பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2000- த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள முதனை, இருப்புக்குறிச்சி, எடக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சில நேரங்களில் மட்டும் குறிபிட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆதலால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அரசக்குழி கிராமத்தில் இருந்து ஷேர் ஆட்டோவையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இருப்புக்குறிச்சியில் உள்ள பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ மூலம் 7- ஆம் வகுப்பு மாணவி சோனா ஆப் ஆர்க், ஆசிரியை மார்க் ரேட், 12- ஆம் வகுப்பு மாணவன் கதிரவன் மற்றும் முகேஷ் உடன் ஆட்டோ டிரைவர் ராய் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருப்புகுறிச்சி கிராமத்தை அடுத்து உள்ள வளைவில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது.
![CUDDALORE SHARE AUTO INCIDENT STUDENTS ADMIT AT HOSPITAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/vvKUHpA07SCtXRquTD2e6ozJjxre8iOTCYuHWQbPy4o/1568306844/sites/default/files/inline-images/CHENNAI555.jpg)
இதனால் ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊமங்கலம் காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
இதில் 12- ஆம் வகுப்பு மாணவர்களான முகேஷ் மற்றும் கதிரவன் மேல் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் கொண்டு சென்றனர். மேலும் தொழில் போட்டியின் காரணமாக ஷேர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதால், அச்சத்துடன் பயணிப்பதாக பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகம் நிலவி வருகிறது.