Skip to main content

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றதால் பதற்றம்!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Cuddalore Reform School children escape in the middle of the night

 

நேற்று முன்தினம் நள்ளிரவு (22.03.2023) கடலூர் டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது சந்தேகப்படும்படி இரு சிறுவர்கள் அந்த வழியாகச் சென்றனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பி வருவதும், அவர்களுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் வேப்ப மரத்தில் ஏறி மதில் சுவர் வழியாக குதித்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த டி.எஸ்.பி உடனடியாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார். அப்போதுதான் அங்கிருந்து சிறுவர்கள் தப்பிய விவரம் இல்லத்தின் இரவு காவலருக்கு தெரியவந்தது. 

 

கடலூர் அடுத்த எஸ்.என்.சாவடி கெடிலம் ஆற்றுச்சாலையில் உள்ள அந்த அரசு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் (சிறார் கூர்நோக்கு இல்லம்) குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு உட்பட்ட 13 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பிறகு சிறுவர்களை அறையில் தங்க வைத்துவிட்டு வார்டன் சிவா இரவு காவல் பணியில் இருந்தார். அனைவரும் தூங்கிய பிறகு திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, கடலூர் கூத்தப்பாக்கம் , சிதம்பரம் அடுத்த கிள்ளை, திருவண்ணாமலை உசம்பாடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனிடையே சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய கிள்ளை மற்றும் திட்டக்குடி ஆவினங்குடியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிள்ளை அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் கணபதி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தப்பி ஓடிய 6 பேரில் நான்கு பேர் பிடிபட்ட நிலையில் கூத்தப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலை சேர்ந்த இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சீர்திருத்த பள்ளியில் உயரமான மதில் சுவர்கள், பாதுகாப்பான இரும்பு கேட்டுகள் இருந்தும் பாதுகாவலர்களின் கண்காணிப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி அங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

 

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் உள்ள 'நல்ல சமேரியர் சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் இயங்கி வந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மற்றும் கோட்டக்குப்பம் கிளை காப்பகத்திலிருந்த 25 பேர் என மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர். கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் 'கருணா மனநலக் காப்பகம்', மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் உள்ள 'டாக்டர் தவராஜ் மனநலக் காப்பகம்' ஆகிய இரு இடங்களில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

 

கடந்த மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு புதுப்பாளையம் காப்பகத்தில் தங்கி இருந்த 4 பேர் கதவை உடைத்து ஜன்னல் வழியாக போர்வையை கட்டி அதன் வழியாக தப்பினர். இதில் ஒருவர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். இருவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஒருவர் என்னவானார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து காப்பகத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் காப்பகத்தில் இரவு காவலாளிகள் தனி அறையில் தூங்கினர். அப்போது குண்டலிப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன்(34), கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம்(44), கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர்(28), கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா(35), திருநெல்வேலி மனோஜ்(25) ஆகியோர் தப்பிச் சென்றனர். முதல் தளத்தில் தங்கி இருந்த அவர்கள் அறையின் கதவை உடைத்து போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காப்பகத்தின் காவலாளிகள் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் காப்பகத்தில் விசாரணை நடத்தி, தப்பியவர்களை தேடி வருகின்றனர். கடலூர் காப்பகத்திலும், கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் தங்கி இருந்தவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.