Skip to main content

கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடன் உடலில் பெட்ரோலை ஊற்றிய வாலிபர்... உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து வந்த வாலிபரை மீட்டுள்ளார் முதன்மை காவலர். 

 

cuddalore police saves a man

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவரது மனைவி ஜெபமேரி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது. இவர்களுக்கு 8 மாதம் ஆண்  குழந்தை ஒன்று உள்ளது. மணிகண்டன் தொடர்ந்து குடி பழக்கத்திற்கு ஆளானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி ஜெபமேரி கணவரை வீட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில்  நெய்வேலி நகரத்தில் உள்ள 25 ஆம் நம்பர் பிளாக்கில் உள்ள தனது  மாமியார் வீட்டின் முன்பு மணிகண்டன் தனது கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,  தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.  இதனை பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது  அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரித்து, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை தனது கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார் . முதன்மை காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார்.

ஆனால் மணிகண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்து கொள்ள போவதாக, கூறிக் கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பயத்தில் யாரும் செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார்.  இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த  காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதானம் பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். இறுதியில் மணிகண்டனின் எட்டு மாத குழந்தையை தூக்கி கொண்டு, முதன்மை காவலர் பாலச்சந்திரன் மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக மணிக்கண்டனிடம் சென்றதும், அழுதபடியே தற்கொலை முயற்சியை கைவிட்டு குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார். 

பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலிலும் துணிச்சலாகவும், சாதூர்யமாகவும் பேசி மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனை அங்கு குவிந்திருந்த பொதுமக்கள் பாராட்டினர். 

 

 

சார்ந்த செய்திகள்