Skip to main content

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; தீர்ப்பைக் கேட்டு தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Cuddalore Girl child case POCSO Court verdict

 

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அதேபகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு உணவு கொண்டுபோவது வழக்கம். அப்படி 12.02.19 அன்று இரவு உணவு கொண்டுபோன சிறுமி, உணவைக் கொடுத்துவிட்டுத் திரும்பி தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, சேத்தியாத்தோப்பு - கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது, குமாரக்குடியைச் சேர்ந்த பாலகுரு மகன் தொழிலாளி திலகர் என்கிற குணசேகரன் (வயது 34). தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்து, அருகிலிருந்த கோயிலின் பின்புறத்திற்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று இருவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

 

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

அப்போது அச்சிறுமி தனக்கு நடந்த பயங்கரத்தைத் தனது தாயிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது தாய், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி எழிலரசி அறிவித்தார். அதில், இவ்வழக்கில் சிறுமியைத் தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச்சென்ற குற்றத்திற்காகத் திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார். மேலும், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடுங்குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர், மாநில அரசுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். 

 

இந்தத் தீர்ப்பைக் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயசங்கர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த மாத்திரைகளை மொத்தமாகத் தனது வாயில் போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கிருந்த காவல்துறையினர் கவனித்து உடனடியாக அவரது வாயிலிருந்து மாத்திரைகளை வெளியே எடுத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.