Skip to main content

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 50- க்கும் மேற்பட்டோர் கைது!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRICT POLICE AND OFFICERS RAID SHOPS


தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதையடுத்து மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். 

 

அதனை தொடர்ந்து, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பூதாமூரைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 43) முல்லாதோட்டம் தன்பத்சிங் (வயது 35), தசரத் (வயது 33), இந்திராநகர் பவுல்ராஜ் (வயதை 53) ஆகிய 4 பேரின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

 

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹிர் மேற்பார்வையில் வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 42), அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலாவதி (வயது 78), வடலூர் பால்கார தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 52), பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 28) ஆகியோரது கடைகளுக்கு சீல் வைத்தனர். 

CUDDALORE DISTRICT POLICE AND OFFICERS RAID SHOPS

அதேபோல், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதேபோல் வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி முன்னிலையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான காவல்துறையினர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் நல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சிவகுமார், சுப்பிரமணியன், கண்டப்பங்குறிச்சி சீனிவாசன், வேப்பூர் கூட்டுரோட்டில் சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் 4 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதேபோல் எழுத்தூரில் 2 பேரை ராமநத்தம் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, காவல் ஆய்வாளர் அன்னக்கொடி ஆகியோர் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது சிறுமுளை, செவ்வேரி, கீரனூர், குமாரை, பெருமுளை, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து ஆறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

பண்ருட்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் பண்ருட்டியைச் சேர்ந்த முகம்மது (வயது 43), திருவதிகை பரந்தாமன் (வயது 60), காந்தி (வயது 47), கோட்டை ஜானகிராமன் (வயது 72), மேல்பட்டாம்பாக்கம் முருகேசன் (வயது 45), அங்குசெட்டிபாளையம் சாகுல் ஹமீத்,  சித்திரைச்சாவடி சம்பத் (வயது 37), புதுப்பேட்டை சங்கர் (வயது 48), ராஜேந்திரன் (வயது 42), பக்கிரிபாளையம் மகபூப் (வயது 53), முருகன் (வயது 42), பிரகாஷ் (வயது 27), மேல்மாம்பட்டு சக்கரவர்த்தி (வயது 48) உள்ளிட்ட  15 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் (23/07/2021) மற்றும் நேற்று (24/07/2021) பெட்டிக்கடைகளிலும், மளிகை கடைகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து போதை பொருட்களை விற்றதாக 50- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

 

இதனிடையே விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் காவல்துறையினர் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அக்பர் (வயது 47), விருத்தாம்பிகை நகர் ரவி (வயது 40) உள்ளிட்ட 5 பேர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்ததைப் பிடித்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 12,300 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்; முக்கிய தகவலை வெளியிட்ட என்.ஐ.ஏ.!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
new information released about bengaluru hotel incident by nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

new information released about bengaluru hotel incident by nia

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சி.சி.டி.வி. காட்சி வெளியாகி இருந்தன. மேலும் சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் உணவகத்தில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) நேற்று (27.03.2024) மூன்று மாநிலங்களில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஒன்று உட்பட மொத்தம் 18 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் சோதனை செய்த பின்னர் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டு துணை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டார்.

new information released about bengaluru hotel incident by nia

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. முக்கிய குற்றவாளியான முசாவிர் முன்னதாகவே என்.ஐ.ஏ.வால் அடையாளம் காட்டப்பட்டார். குண்டுவெடிப்பை நடத்தியவர் ஷசீப் உசேன். மற்றொரு சதிகாரரான அப்துல் என்பவரையும் என்.ஐ.ஏ. அடையாளம் கண்டுள்ளது. மற்ற வழக்குகளில் என்.ஐ.ஏ. ஏஜென்சியால் தேடப்பட்டவர் மதின் தாஹா. இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். மார்ச் 1 ஆம் தேதி பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஐடிபிஎல் சாலையில் உள்ள கபேயில் ஐ.இ.டி. வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவருக்கு முஸம்மில் ஷரீப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பல வாடிக்கையாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் கடுமையாக, வெடிவிபத்தில் சிக்கினர். மேலும் ஹோட்டல் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

new information released about bengaluru hotel incident by nia

இந்த மூன்று குற்றவாளிகளின் வீடுகளிலும், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளிலும், கடைகளிலும் இன்று (28.03.2024) சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பணம் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்கவும், குண்டுவெடிப்புக்குப் பின் உள்ள பெரிய சதியைக் கண்டறியவும் முயற்சிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.