Skip to main content

ஊரடங்கு விதிகளை மீறி நடந்த மீன்பிடி திருவிழா!

Published on 06/06/2021 | Edited on 06/06/2021

 

 

cuddalore district lake fish peoples police coronavirus lockdown

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள மன்னம்பாடியில் உள்ள ஏரியில் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள் காவல்துறையினரைக் கண்டதும் தெறித்து ஓடினர்.

 

மன்னம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மன்னம்பாடி, இடையூர், படுகளாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று (06/06/2021) காலை முழு ஊரடங்கு உத்தரவைமக் கண்டு கொள்ளாமல் பல்வேறு கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர்  ஏரியில் ஒன்றுகூடி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

cuddalore district lake fish peoples police coronavirus lockdown

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறையினர், ஏரி பகுதிக்கு வேனில் வரவே, ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆண்கள், இளைஞர்கள் நான்கு புறமும் தெறித்து ஓடினர்.

 

கரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து,  உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“மீனவர்கள் மீது இருமுனைத் தாக்குதல்” - அன்புமணி 

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Anbumani condemn for srilanka navy

 

“இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது” என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

வங்கக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற நயவஞ்சக  எண்ணத்துடன் தான் சிங்களக் கடற்படையினர் இத்தகைய கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஒருபுறம் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல், இன்னொருபுறம் மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல் என இருமுனைத்  தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இதனால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

 

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா தான் உதவிகளை வழங்கி வருகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் நாகை - காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்தையும் இந்தியா தொடங்கியுள்ளது.  ஆனால்,  இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாத  இலங்கை அரசு, மீனவர்களை தாக்கியும், கைது செய்தும் இந்தியாவின்  இறையாண்மைக்கு சவால் விடுத்து  வருகிறது. சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தமிழக மீனவர்கள் அவர்களின் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் தடையின்றி மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.