Skip to main content

கர்ப்பிணிப் பெண்ணின் வலி மிகுந்த பயணம்; நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Cuddalore Collector praised doctor who delivered  pregnant woman who was in convulsions

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருமுருகன் - ஷியமாளா தம்பதியர். திருமுருகன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷியமாளா 9 மாத கர்ப்பிணி. பிரசவம் பார்ப்பதற்குச் சென்னையிலிருந்து திருவாரூர் வழியாகத் தங்கள் சொந்த ஊருக்கு ரயிலில் கணவர் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த ரயில் விழுப்புரம் கடந்த போது நிறைமாத கர்ப்பிணி ஷியமாளாவுக்கு வலிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டுள்ளார். 

மனைவிக்கு ஏற்பட்ட நிலை கண்டு திருமுருகன் துடித்துப் போனார். உடனடியாக அங்கிருந்த பயணிகள் இது குறித்து ரயில் காப்பாளரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அருகில் மருத்துவமனை இருக்கும் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துவதற்கு முடிவு செய்தனர். திருமுருகன் மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். கடலூரை நெருங்கிக் கொண்டிருந்தது ரயில், அதற்குள் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸை டிரைவர் பெஞ்சமின் பிராங்கிளின் தயாராக நிறுத்திவிட்டு சியாமளாவின் கணவர் திருமுருகனுக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில் காப்பாளர், கர்ப்பிணிப் பெண் சியாமளாவின் நிலைமையைக் கருதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தம் இல்லாதபோதிலும் ரயிலை நிறுத்தினார். ரயிலில் மயக்க நிலையில் இருந்த ஷியாமாளாவை பயணிகள் உதவியுடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து 108 ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்து ஏற்றினர். அதற்குள் முன்னேற்பாடாக கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி ஷியாமளாவின் உடனடி பிரசவத்திற்கு தயார் நிலையில் இருந்தார்.

ஷியாமளா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஷியமாளா வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தபோதும் அமினா கொடுத்து பிரசவம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குழந்தை இறந்து பிறந்தாலும் பரவாயில்லை என்று தாயையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், நல்லபடியாக குழந்தையும் பிறந்தது. தாயும் நலமுடன் உள்ளார். இதனைத் தொடர்ந்து கணவர் திருமுருகன் மருத்துவக்குழுவுக்கும் ஆம்புலன்ஸ் குழுவினருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இது குறித்து அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மருத்துவமனைக்கு விரைந்து, தாய் மற்றும் குழந்தை இருவரையும் பார்த்து நலம் விசாரித்தார். இக்கட்டான சூழ்நிலையில் திறம்படச் செயல்பட்டு இரு உயிரையும் காப்பாற்றிய மருத்துவர் மகேஸ்வரி அவரது குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.