Skip to main content

பட்டாசு குடோன் வெடி விபத்து – கணவன், மனைவி பலி

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

crackers fire accident in Dindigul police investigation

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜெயராமன். இவர் இந்து முன்னணியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர், தனது மனைவி நாகராணி மற்றும் குழந்தைகள் தீப்திகா, கனிஷ்கா, போகன் ஆகியோருடன் செம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கம்மாய் அருகே வசித்து வந்தார்.  

 

புல்வெட்டி கம்மாய் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் கீழ்த்தளத்தில் 5 கடைகள் உள்ளன. 5 கடைகளிலும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உள்ளன. கட்டடத்தின் மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் ஜெயராமன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஜெயராமனின் குழந்தைகள் மூவரும் வணிகம் வளாகம் முன்பு காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலே ஜெயராமன், அவரது மனைவி நாகராணி மற்றும் பணியாட்கள் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இதில் கட்டடத்தின் மூன்று தளங்களும் தரைமட்டமானது. கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் சேதமடைந்தன. கட்டடத்தின் கீழே பட்டாசுக்கடை முன்பு நின்று கொண்டிருந்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

 

வெடிவிபத்து குறித்து அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன், காவல் ஆய்வாளர்கள் வெள்ளையப்பன், செந்தில்குமார் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன் விரைந்து வந்து கட்டடத்தின் மேல்பகுதியில் தண்ணீரைப் பீச்சி அடித்து பட்டாசுகளை வெடிக்காமல் செய்துவிட்டு கட்டடத்தின் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி இருந்த நபர்களை மீட்க முயன்றனர். 

 

crackers fire accident in Dindigul police investigation

 

உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு நான்கு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களும் இளைஞர்களும் குவிந்தனர்.

 

இந்த விபத்தில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் வெடி விபத்து ஏற்பட்டதா? அல்லது சிலிண்டரால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.