Skip to main content

மதுவிற்கு ஆசைப்பட்டுச் சென்றவர் கொலையான பரிதாபம்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

cowherd incident in villupuram district police arrested 20 years  old man

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் ராதாபுரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக விவசாய வேலைக்குச் சென்றவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விக்கிரவாண்டி போலீசார் அந்த வயல் பகுதிக்குச் சென்று இறந்து கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில், இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் விழுப்புரம் நகரத்தை ஒட்டி உள்ள வி. மருதூர் என்ற  ஊரைச் சேர்ந்த 55 வயது முருகன் என்பதும், மாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தும் இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது. அவர் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில் மற்றும் செருப்புகள் கிடந்துள்ளது. இதையடுத்து விழுப்புரம்  டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த நபர் யாருடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார் என்று விசாரணை நடத்தினர். அதில், அதே மருதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற 20 வயது வாலிபர் என்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் சரவணனை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் முதியவர் முருகனை அடித்துக் கொலை செய்ததை சரவணன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

முருகனைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "மாடுகள் மேய்த்து அதை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் முருகன் சமீபத்தில் ஒரு மாட்டை 16 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தை அவரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதற்காக முருகனுக்கு இலவசமாக மது வாங்கித் தருவதாக ஆசை காட்டி அவரை ஒரத்தூர் ராதாபுரம் வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்து குடிக்க வைத்தேன். அவருக்கு போதை ஏறியதும் தடியால் அவர் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தைப் பறித்துச் சென்றதாக" வாக்குமூலம் அளித்துள்ளார் சரவணன்.

 

இதையடுத்து போலீசார் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். மாடு மேய்த்து தொழில் செய்யும் ஒருவரிடமிருந்து 16,000 பணத்திற்காக ஒரு கொலை செய்த வாலிபரின் செயல் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.