இயக்குனர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தன்னை கைது செய்ய தடைக்கோரி இயக்குனர் ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்திருந்தார்.
![ranjith](http://image.nakkheeran.in/cdn/farfuture/FQEsOviLduoVNwiIxnd4_uhlOyvYzg4Hwr6oM1M1qIw/1561111008/sites/default/files/inline-images/we3e.jpg)
கடந்த 19 ஆம் தேதி நடந்த விசாரணைக்கு பிறகு பா.ரஞ்சித்தின் முன்ஜாமீன் விசாரணையை ஜூன் 21 ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது உயர்நீதிமன்ற கிளை, மேலும் ஜூன் 21 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி முத்துக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய அவகாசம் வழங்கியும் வழக்கை 21 ஆம் தேதி (இன்று) ஒத்திவைத்திருந்தது நீதிமன்றம்.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக தன்னையும் சேர்க்கக்கோரி வழக்கறிஞர் ரஜினி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். சட்ட ரீதியாக சேர்க்க வாய்ப்பில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பா.ரஞ்சித் தரப்பும், வழக்கறிஞர் ரஜினி தரப்பும் கால அவகாசம் கேட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் திங்கள் கிழமை வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என கோரப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.