
ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோலனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்றும், அதை திருடிய நபர் மணிகண்டனிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

ஆனால் இந்த சம்பவத்தில் தனது மகன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் எங்களது மகனை போலீசார் தாக்கி கொன்றுவிட்டதாக மணிகண்டனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், எனது மகன் உயிரிழப்புதொடர்பாக சரியான உண்மை தெரியவில்லை இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என மணிகண்டனின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், மாணவன் மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும். நடத்தப்படும் மறுஉடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுபிரேத பரிசோதனைக்குப்பின் உடலை பெற்றுக்கொள்வதாக மனுதாரர் உறுதி வழங்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, உடலை அடக்கம் செய்யும் வரை போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)