Skip to main content

நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை..! 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Court employee jailed for 10 years

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணலூரைச் சேர்ந்தவர் அன்பழகன் (57). இவரது மனைவி ராஜேஸ்வரி (49). இவர்களின் மகன் பிரபு (25). இவர் 24 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் கருத்தரித்துள்ளார். அப்போது வேலை இல்லாமல் இருந்ததால் வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், கருவைக் கலைக்குமாறும் பிரபு கூறியுள்ளார். அதன்படி அந்தப் பெண் கருவைக் கலைத்துள்ளார்.

 

அதன் பின்னர், பிரபுவுக்கு நீதிமன்றத்தில் வேலை கிடைத்துள்ளது. அதனால் அப்பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரபு, திருமணம் செய்ய மறுத்ததுடன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு அப்பெண் விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், நல்வாய்ப்பாக அவர் மீட்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார். அப்போது, பெண்ணைக் காதலித்து கருவுறச்செய்து, தற்கொலைக்குத் தூண்டியதாக பிரபு மீது பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானித்தனர்.  ஆனால், பிரபு மீது அப்போது வழக்குப் பதிவுசெய்தால் அரசு வேலைக்கு ஏதாவது ஆபத்து நேரிடும் எனவும் மூன்று மாதத்திற்குப் பிறகு திருமணம் செய்துவைப்பதாகவும், எனவே புகார் செய்ய வேண்டாம் என்றும் பிரபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

அதனை நம்பிய அந்தப் பெண் வீட்டார் புகார் அளிக்கவில்லை. அதன்பிறகு பிரபு வீட்டார் தெரிவித்ததுபோல் சில மாதங்கள் கழித்து அப்பெண் வீட்டார், பிரபு வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது பிரபுவின் பெற்றோர், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

அதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10.11.2017 அன்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் அரசு வழக்கறிஞர் செல்வபிரியா வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், காதலித்து ஏமாற்றி, கருவைக் கலைத்த நீதிமன்ற ஊழியர் பிரபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பிரபுவின் பெற்றோர் அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.