கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பென்சிலால், சடையின், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் ஆகிய ஆறு பேரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.