Skip to main content

"கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்; தேவையில்லாமல் வெளியே வராதீங்க!" - மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை!!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

coronavirus prevention meeting salem district collector speech


கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.15) நடந்தது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுத்திட பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும்.

 

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கும் வகையில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்றுக்கு உள்ளான நபர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க, கண்காணிப்பு மையங்களும் தொடங்கப்பட்டு வருகின்றன.

 

தற்போது மணியனூர் சட்டக்கல்லூரியில் 100 படுக்கையும், கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள சாரோன் மருத்துவமனை வளாகத்தில் 180 படுக்கையும், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி விடுதியில் 120 படுக்கையும் கொண்ட கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பரவாமல் இருக்க, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தற்போது வரை மாவட்டம் முழுவதும் 1.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

 

அடுத்த 2 வாரங்களில் கரோனா தொற்று மிகத் தீவிரமாகப் பரவும் சூழல் உள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொது இடங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்திட வேண்டும்.

 

பொதுமக்கள் தங்களுக்கோ அல்லது அருகில் உள்ளவர்களுக்கோ காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

 

தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலை, உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கடைப்பிடித்திட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

 

சேலம் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்திட வேண்டும். 

 

அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

 

இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 1,93,185 பேருக்கும், இரண்டாம் தவணையாக 32,935 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

 

அதேபோல் கோவாக்சின் தடுப்பூசி 28,166 பேருக்கு முதல் தவணையாகவும், 871 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் போடப்பட்டுள்ளது. போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 

 

சேலம் மாவட்டத்தில் ஏப். 13- ஆம் தேதி நடத்தப்பட்ட சளி தடவல் பரிசோதனையில் 138 பேருக்கும், ஏப். 14- ஆம் தேதி நடந்த பரிசோதனையில் 175 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

 

இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்திட வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ராமன் கூறினார்.

 

ஆய்வுக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குநர்கள் சுப்ரமணி, செல்வக்குமார், சேலம் மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.