Skip to main content

இனி ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள் இயங்காது! - சேலம் மாநகர ஆணையர்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

CORONAVIRUS PREVENTION MEAT SHOPS CLOSED IN SALEM DISTRICT FOR SUNDAY

 

கரோனா தொற்றுப் பரவலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தம் நோக்கில், சேலம் மாநகரப் பகுதிகளில் இனி ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சேலம் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விடுமுறை தினங்களில் சந்தைகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகை தருவதாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காததாலும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

 

ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி சேலம் பழைய பேருந்து நிலையம் ஆற்றோரப் பாலத்தின் மேல் உள்ள மீன் இறைச்சி சந்தை, சூரமங்கலம் தர்ம நகர் நவீன மீன் இறைச்சி சந்தை ஆகியவற்றில் உள்ள மீன் மற்றும் இதர இறைச்சிக் கடைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 18) முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு தொடரும்.

 

மீன் மற்றும் இறைச்சி வியாபாரிகள், குத்தகைதாரர்கள், சந்தைக்கு வரும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்." இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்