Skip to main content

காசி யாத்திரை சென்று சிக்கித் தவிக்கும் முதியவர்கள்... உதவிக் கரம் நீட்டிய பெரம்பலூர் எம்.பி...!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

பெரம்பலூர் பகுதியில் இருந்து 56 முதியவர்கள் காசிக்கு யாத்திரை சென்றுள்ளனர். ரயில் மூலமாக சென்ற நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களால் தமிழகம் திரும்ப முடியவில்லை.

 

Corona virus issue - Perambalur MP Help for Elderly people

 



இதுப்பற்றிய தகவல் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதி எம்.பியான பாரிவேந்தரிடம் 56 பேரின் உறவினர்கள் தெரிவித்து ஊர் திரும்ப உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். நிலைமையை அவர்களிடம் விவரித்த பாரிவேந்தர் அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே வசதி செய்து தர ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.

அதன்படி காசியில் உள்ள அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதோடு அவர்கள் தங்கியுள்ள காசி ஸ்ரீ குமாரசாமி மடத்தின் நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடத்துக்கான கட்டணத்தைத் தனது சொந்த நிதியில் இருந்து அனுப்பி வைப்பதாகவும், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களும் அவர்களை நாங்கள் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம், தேவையான உணவினை தருகிறோம் எனச் சொல்லியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த முதியவர்களின் பராமரிப்பு செலவுக்காக அந்த மட நிர்வாகத்துக்காக 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

அங்குள்ள பெரும்பாலானவர்கள்  முதியவர்கள், சர்கரை நோய் உள்ளவர்கள் என்பதால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் அதற்கான உடனடி ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது நிலையை விளக்கி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்கிறார்கள் பாரிவேந்தர் தரப்பில்.

 

சார்ந்த செய்திகள்