Skip to main content

உயிரையும் பறித்து உறவுகளையும் சிதைத்த 'கரோனா' 

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

'Corona' takes lives and destroys relationships

 

ஈரோடு பச்சபாளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் 26 வயது ரம்யா. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் சென்ற 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்யா கணவருடன் கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான குமரேசன் சென்ற ஜூன் மாதம் 1 ந் தேதி  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி ரம்யாயை அவரது மாமனார் " உனக்கு ராசி இல்லை... உன்னால்தான் என் மகன் இறந்துவிட்டான்'' எனக் கூறி ரம்யாவை கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.

 

மேலும் அவர் வீட்டில் இருக்கக்கூடாது என்று கூறி விரட்டியிருக்கிறார். அவரது மாமனாருடன் கணவரின் தம்பியான கொழுந்தனாரும் அவரது மனைவியும் உடன் சேர்ந்து ''ரம்யாவை நீ வீட்டை விட்டுச் செல்லவில்லை என்றால் உன்னையும் உனது அம்மாவையும் கொலை செய்து விடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இறந்த ரம்யாவின் கணவர் எல்ஐசி பாலிசி போட்டுள்ளார். நல வாரியத்தில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தார். அதோடு ரூபாய்  2 லட்சம் சீட்டு ஒன்றும் போட்டிருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பெற்றோரில் ஒருவர் கரோனா காரணமாக இறந்தால் அரசு உதவி பணம் கிடைக்கும். இவை அனைத்தும் மனைவியான ரம்யாவுக்கு வரும் என்பதால் அவர்கள் அதற்குத் தடையாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் ஈரோடு வந்த ரம்யா தனது குழந்தையுடன் சென்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார். அதில் அவர், "என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் எனது 20 பவுன் நகையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே காவல்துறை தலையிட்டு எனது மாமனார், கொழுந்தனார் மற்றும் அவரது மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய பணம் மற்றும் நகைகளை மீட்டுத்தர வேண்டும். மேலும் எங்களுக்கு  உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும்"  எனக் கூறியிருக்கிறார். கரோனா உயிரை மட்டுமா பறிக்கிறது? உறவுகளையும்தான் சிதைக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.