Skip to main content

“கரோனா பரவல் மூன்றாம் உலகப் போர்: முறியடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” - ராமதாஸ்

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

"Corona Spreads World War III: People Must Cooperate to Overcome" - Ramadas

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிக அளவில் இருந்துவருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் தொற்று பாதித்தவர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால், சாலைகளில் வாகனங்களின் நெருக்கடி அதிகளவிலேயே உள்ளது. 

 

இதனைக் கட்டுப்படுத்த, தீவிர ஊரடங்கு செயல்படுத்தவில்லை என்றால், கரோனாவின் பரவல் இன்னும் அதிகரிக்கும் எனவும், பாதிப்பும் அதிகமாக இருக்குமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில், அதற்கான நடவடிக்கைகளுக்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

 

கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு சந்தித்த மோசமான பேரழிவு கரோனா வைரஸ் தாக்குதல்தான் என்று கூறும் அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை தமிழ்நாடு எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலால் இதுவரை 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,768 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ கணக்குகள் மட்டுமே. கரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்தும், குடும்பத் தலைவர்களை இழந்தும் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஏராளம்.

 

பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் பார்த்தால் கரோனா வைரஸ் தாக்குதலை மூன்றாவது உலகப் போராகவே கருத வேண்டியுள்ளது. இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் நான்கரை ஆண்டுகள் நடைபெற்ற முதல் உலகப் போரில் 1.30 கோடி அப்பாவி மக்களும், பின்னர் 7 ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலகப் போரில் 40 கோடி அப்பாவி மக்களும் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் உலகில் 16.18 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 33.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 2.40 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 2.62 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கும் வகையில் உள்ள நிலையில், எந்தக் கவலையும், அச்சமும் இல்லாமல் ஊரடங்கை மீறி சாலைகளில் பொதுமக்கள் நடமாடுவது மிகவும் கவலையளிக்கிறது.

 

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 100 பேருக்கு கரோனா சோதனை மேற்கொண்டால், அவர்களில் 21 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்கள் ஒரு நிமிடம் அலட்சியமாக இருந்தாலும் அவர்கள் கரோனாவால் தாக்கப்படும் ஆபத்து உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டால் அடுத்த சில நாட்களில் சாதாரணமாக குணமடைந்துவிடலாம் என்ற சூழல் இப்போது இல்லை. முதல் அலையின்போது பாதிக்கப்பட்டவர்களில், 30 விழுக்காட்டினருக்கு மட்டும்தான் ஆக்சிஜன் தேவைப்பட்டதாகவும், இப்போது 70 விழுக்காட்டினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

 

ஊரடங்கை மதிக்காமல் பெருமளவிலானவர்கள் சாலைகளில் நடமாடுவது குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்றுமுதல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரித்திருக்கிறது. காவல்துறையினரும் இன்றுமுதல் வாகனங்களைத் தடுத்து அபராதம் விதித்துவருகின்றனர். ஆனாலும், காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு சாலைகளில் பலரும் திரிந்துகொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் சற்றும் குறையவில்லை.

 

கரோனா காலத்தில் காவல்துறையினரும் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்துதான் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 94 காவல்துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இன்றைய நிலையில் 2,088 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவம் பெற்றுவருகின்றனர். கரோனா தொற்றுக்கு ஆளாகி, எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் சாலைகளில் திரியும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவலர்கள்தான் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில்  வலம் வருபவர்கள் தாங்களும் நோயை வாங்கிக்கொண்டு, மற்றவர்களுக்கும் நோயைத் தருகின்றனர்.

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சாலைகளில் சுற்றுவோரின் வாகனங்கள் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனால் சாலைகளில் சுற்ற பலரும் அஞ்சினார்கள். ஆனால், இப்போது சிறிய தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறதே தவிர, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த அணுகுமுறையை மாற்றி ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விதிகளை மீறி சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றாமல் வீடுகளில் அடங்கிக் கிடக்கும் நிலையை உருவாக்க முடியும்.

 

பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், கரோனா பரவலை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து சுதந்திரமாக நடமாடும் சூழலை உருவாக்கலாம். மாறாக, நோய்த்தொற்று அதிகரிப்பது தொடர்ந்தால், வரும் 24ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர் அயர்ந்து போயிருப்பதால், அடுத்தக்கட்டமாக நிலைமையை சமாளிக்க துணை இராணுவப் படையினரை அழைக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே மக்கள் சூழலை உணர்ந்து வீடுகளில் அடங்கி, கரோனா தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.