![Corona on the rise in Tamil Nadu; One more person was passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/YEsiVyHJPhk3e4qdqTONaYIN9a6twbrUkSs5zUUChAs/1680609758/sites/default/files/inline-images/27_55.jpg)
நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் மொத்தம் ஐந்து பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 55 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளக்கோவிலைச் சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.