கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து இருக்கிறது. அதோடு சுற்றுலாத்தலங்கள், கோயில்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் சுற்றுலாதலங்களுக்கும், கோயில்களுக்கும் போவதையும் பெரும்பாலும் தவித்து வருகிறார்கள்.
ஆனால் தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற பழனி முருகனை தரிசிக்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநில பக்தர்களும், தமிழகத்தில் உள்ள பலமாவட்டங்களிலிருந்தும் இருக்கக்கூடிய பக்தர்களும் தினசரி முருகனை தரிசிக்க வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி வரக்கூடிய பக்தர்களுக்காக படிப்பாதை விஞ்சு ரோப், மலை சன்னிதானத்தில் ஒரு டாக்டர் தலைமையில் 4 நர்ஸ்கள் கொண்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமுகாம்களில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பரிசோதனை செய்துவிட்டுதான் முருகனை தரிசிக்க அனுப்பிவைத்து வருகிறார்கள். அதோடு பக்தர்கள் யாருக்கேனும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் உடனே அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்துகொள்ளலாம். அந்த அளவுக்கு கரோனா வைரஸிலிருந்து பக்தர்களை காப்பாற்றுவதற்காக சப்-கலெக்டர் உமா மற்றும் கோவில் நிர்வாக அதிகாரியான ஐ.ஏ.எஸ் சந்திரபானு ரெட்டி ஆகியோர் இந்த மருத்துவக் குழுக்களை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதுபோல் ரயில்வே நிலையம், பஸ்ஸ்டாண்டு உள்பட நகரங்களின் முக்கிய பகுதிகளிலும் மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளனர்.
இருந்தாலும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறைந்த அளவிலே வருவதால் அடிவாரம் முதல் கோயில் வரை வெறிச்சோடி கிடக்கிறது.
இது சம்பந்தமாக பழனி தண்டபாணி கோவில் செயல் அதிகாரியான சந்திரபானு ரெட்டி கூறும்போது,
கரோனாவிலிருந்து பொதுமக்களையும், பக்தர்களையும் காப்பாற்றுவதற்காக அங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மாஸ்க் கட்டிதான் பணிபுரிந்து வருகிறார்கள். அதுபோல் தினசரி மலைக்கோயிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கி வருவதால் அன்னதானம் சப்ளை செய்யும் ஊழியர்கள் கூட மாஸ்க் கட்டிதான் பணி செய்து வருகிறார்கள். இருந்தாலும் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக மாஸ்க் வழங்கவும் முடிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு சில நாட்களில் முருகனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் மாஸ்க் வழங்கப்படும் என்று கூறினார்.