![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/nL7MS9EKhe6ken5TTKKT7z8hTCPKzIjdYnTxB57hDoo/1541268412/sites/default/files/inline-images/sand%201.jpg)
நாகையில் சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் மதிப்பிலான 500 லோடு மணலை போலிசார் கைப்பற்றி வழக்குப்போட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள சுக்கானூர் கிராத்தில் சட்டத்திற்கு விரோதமாக அளவுக்கு அதிகமான மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையிலான தனிப்படை போலீசார் மணல் குவிக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி ஒரே இடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 லோடு மணலை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பாலு உள்ளிட்ட மணல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்ட்டர்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் கைப்பற்றிய மணலின் மதிப்பு சுமார் 80 லட்சம் என மதிப்பீடு செய்கிறார்கள். கைப்பற்றப்பட்ட மணலுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
![s2](http://image.nakkheeran.in/cdn/farfuture/C4_IfmSATCr0qUSB1EQbu5Y-BaMG8UmS4o_jk-FsUz4/1541268444/sites/default/files/inline-images/sand2_1.jpg)
ஏற்கனவே சீர்காழி அடுத்துள்ள ராதாநல்லூர் பகுதியில் பி.ஜே.பி பிரமுகரால் பதுக்கி வைத்திருந்த மணலை 4 கோடி மதிப்பிலான மணலை அதிரடியாக கைப்பற்றி போலீசார் பாதுகாப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட எஸ்.பியாக விஜயக்குமார் பொறுப்பேற்ற நாள் முதல் ஒரு மாத காலமாக சுமார் நாற்பதுக்கும் அதிகமான மணல் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு அதிரடி செயல்பாட்டிலும் மணல் கடத்தல்காரர்களின் கைவரிசை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என வேதனைப்படுகிறார்கள் காக்கிகள்.