Skip to main content

தொடரும் கொள்ளை சம்பவங்கள்... அதிர்ச்சியில் காவல்துறையினர்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

Continuing robbery incidents

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓங்கூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (36). இவர் மொபைல் ஃபோன் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் (11.09.2021) வீட்டைப் பூட்டிவிட்டு, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

இதுகுறித்து சின்னசாமி ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், தடயவியல் நிபுணர்களால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர்களைத் தேடிவருகிறார்கள்.

 

அதே நாளில் திருக்கோவிலூர் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். கட்டட மேஸ்திரி வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மலர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலை சென்றுள்ளார். மறுநாள் காலை அவரது பக்கத்து வீட்டுக்காரர் மலருக்கு செல்ஃபோனில் தொடர்புகொண்டு, மலரின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

 

அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய மலர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகை களவு போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.

 

இதையடுத்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுபாக்கம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு மகன் சந்தோஷ் குமார். விவசாயியான இவர், உடல்நிலை சரியில்லை என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலமுருகன் என்பவர் செல்ஃபோன் மூலம் சந்தோஷ் குமாரை தொடர்புகொண்டு அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

 

சந்தோஷ்குமார் அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்கம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சந்தோஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் வழக்குப் பதிவுசெய்து கொள்ளையர்களைத் தேடிவருகிறார். ஒரே நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.