Skip to main content

ஈரோட்டில் தொடரும் உச்சம்...! - கட்டுக்கடங்காத கரோனா...!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

erode corona

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்தது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிய சென்ற சில நாட்களாக மீண்டும் ஈரோட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா பரவல் மீண்டும் கூடுதல் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் சென்ற 7-ந் தேதி தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியல் படி கடந்த 18 ந் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிதாக மேலும் 777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

 

நேற்று ஒரேநாளில் 237 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிப்புடன் 75 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது.

 

தற்போது மாவட்டம் முழுவதும் 3,366 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகரப் பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாகப் பரவி வருகிறது.

 

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு இரவு நேர ஊரடங்கு, மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறோம். ஊரடங்கின் போது சாலைகள் வெறிச்சோடித் தான் காணப்படுகிறது. ஆனால் வைரஸ் பரவல் தான் கட்டுக்குள் வரவே இல்லை. ஈரோடு மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 4,500 முதல் 5,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது ஈரோடு மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவுதான்.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனோர் 60 வயதை கடந்த முதியவர்கள்தான். எனவே 60 வயது தாண்டிய முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.