![Continued theft of goats... Screaming farmers...](http://image.nakkheeran.in/cdn/farfuture/1iKnWl34kUcuy3jYeksAmdVdL9A2-HAlnyi_AoNADhc/1663586345/sites/default/files/inline-images/n2041.jpg)
தமிழகம் முழுவதும் ஆடுகள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆடு திருடர்களை பிடிக்கச் சென்ற போலீசார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து சில மாதங்கள் கடுமையான ரோந்துப் பணிகளும், தனிப்படைகளும் அமைக்கப்பட்டு திருடப்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஆடுகள் திருட்டு தலைதூக்கி இருக்கிறது.
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பகுதியில் மொத்தமாக திருடப்பட்ட ஆடுகளை மீட்க முடியாமல் போலீசார் திணறிய போது, அதேகும்பல் மீண்டும் ஆடு திருட இடம் பார்க்க வந்த போது பிடிபட்டது. அவர்களிடம் இருந்து ஆடுகளும் மீட்கப்பட்டன. வடகாடு காவல் சரகம் நெடுவாசல் மேற்கு அரணமனைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் வீட்டில் நின்ற 2 ஆடுகள், திருமேனி என்பவர் வீட்டில் 2 ஆடுகள் என 4 ஆடுகள் வெள்ளிக்கிழமை இரவு காணாமல் போனது. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் ஒரு ஆடு நேற்று இரவு காணாமல் போனது. இதுகுறித்து 3 பேரும் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் வடகாடு பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல் கீரமங்கலம் காவல் சரகம் குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ராஜகுமாரி வளர்த்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கிராமப்புற ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து திருடப்படுவதால் கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் தனிப்படைகள் அமைத்து ஆடு திருடர்களை கண்டுபிடித்தால் மட்டுமே ஆடு திருட்டுகளை தடுக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.