மாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. தொடர்ந்து பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், சிசிடிவி காட்சிகளும் அனுதினம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் அபாயகரமாக பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ முறை போலீசார் எச்சரித்தும், விழிப்புணர்வுகளை வழங்கியும், குறிப்பாக சென்னை போன்ற போக்குவரத்து கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது அனைவரின் கண்டனத்தையும் பெற்று வருகிறது.