
டெல்லியில் விஞ்ஞான் பவனில் 25ம் தேதி 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி உள்ளிட்ட விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ள என் அன்புத்தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கும், சிறப்பு தேசிய விருதினைப் பெற்றிருக்கும் சகோதரர் பார்த்திபன் அவர்களுக்கும், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி தனுஷ், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி இமான், சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள தம்பி விஜய்சேதுபதி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருதுபெற்ற சகோதரர் ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நாகவிஷால் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். விருதுபெற்ற அனைவரும் தொடர்ந்து இதுபோன்று சிறந்த படைப்புகள் கொடுத்து, தமிழ்த் திரைக்கலைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரியவும், இன்னும் பல உயரிய விருதுகள் வென்று, புகழும் பெருமையும் பெறவேண்டுமென உள்ளன்போடு விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.