Skip to main content

“ஆன்லைன் மோசடிகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம்” - டி.ஜி.பி சைலேந்திரபாபு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

complaint online scams within 24 hours can prevent money loss DGP Sylendra Babu

 

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து விருத்தாசலம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓராண்டில் நடந்த 24 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 92 பவுன் நகைகளையும் சிதம்பரம், காடாம்புலியூர் பகுதியில் 4 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 38 பவுன் நகைகளையும் உரியவர்களிடம் சைலேந்திரபாபு ஒப்படைத்தார்.

 

மேலும் மாவட்டத்தில், பொதுமக்கள் தவறவிட்ட 15 செல்போன்கள் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த சைலேந்திரபாபு, "கடலூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட 130 பவுன் நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் போலீசார் புலன் விசாரணை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முத்தாண்டிக்குப்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து 36 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அறிவியல் ரீதியாக போலீசார் புலன் விசாரணை செய்து பழைய வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர்.

 

தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 1,32,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் பேரை நியமித்தோம். இதுவரை உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் நிலையங்களில் வயது குறைந்த இன்ஸ்பெக்டர்கள்,  சப்-இன்ஸ்பெக்டர்கள்  மற்றும் துணை போலீஸ் சூப்பரண்டுகள் தான் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு எல்லையான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய எல்லைகளில் உள்ள 26 முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுதமேந்திய போலீசார் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும். இணையவழி குற்றங்களான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் என்பது எதிர்காலத்திற்கான குற்றங்கள் ஆகும். இதுவரை மக்கள் சந்திக்காத குற்றங்கள் அவை. வேலை வாங்கித் தருவதாகவும் தொழில் தொடங்க உதவுவதாகவும் மேல் அதிகாரிகள் பேசுவதாகவும் எனப் பல்வேறு வழிமுறைகளில் சைபர் க்ரைம் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

 

இதற்கு 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விடாமல் தடுக்க முடியும். பண இழப்பையும் தடுக்க முடியும். சிவகங்கையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவரிடம் 26 ஆயிரம் சிம் கார்டுகள், 1200 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ரூபாய் 5 கோடி தொகைக்கான குற்றங்களில் இதுவரை ரூபாய் 32 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தலாம்" என்று கூறினார். அப்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.