![Complaint against actor Mansoor Ali Khan at DGP's office - Chennai Corporation Commissioner interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/1fBbWbEywvlDWHWDYDnCm3rCkZvuY1uoxQCsnRsA6h4/1618729466/sites/default/files/inline-images/dtretret_1.jpg)
தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் திருமண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், கரோனாவை கட்டுப்படுத்த இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் வர உள்ளன. தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.