Skip to main content

“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ராராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த தம்பி ராமையா, சினிமாத்துறையில் பிரபலமடைந்து சாதித்துவருகிறார். சினிமாவில் சாதிக்கத் தொடங்கினாலும் பிறந்த மண்ணையும், உடன் பிறந்தோர், உறவுகளையும் நேசிப்பவர். அவரது உடன்பிறந்த தம்பி உமாபதி, இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு திருமணமான 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் அகிலன், முகிலன் பிறந்தனர். உமாபதி ரியாத்தில் வாட்டர் ஹீட்டர் ப்ராஜெக்டில் 2014ஆம் ஆண்டு 'மிஸ்டர் ப்ரைன்' அவார்டு வாங்கியுள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரியின் தந்தை உடல்நக்குறைவால் உயிரிழந்ததால் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்தனர். தந்தை இறந்த 15 நாட்களில் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த தம்பியும் கரோனாவுக்குப் பலியான நிலையில், அடுத்து அவரது தாயாரும் உயிரிழந்தார். இப்படி தன் குடும்பத்தில் ஒவ்வொரு உயிராக பறிபோவதை நினைத்து மனமுடைந்திருந்த ராஜகுமாரிக்கு, 25 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

இப்படி அடுத்தடுத்து நடக்கும் துயரங்களைத் தாங்கமுடியாமல் கதறிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி ராமையாவின் குடும்பத்தினர். தம்பி ராமையா இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விவேக் உயிரிழந்தபோது, அவரது நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் இளைஞர்கள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் உலகமெங்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். கொத்தமங்கலம் இளைஞர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு 'நம் புதுக்கோட்டை மண் எப்பவும் முன்னோடியான மண் என்பதைக் காட்டிவிட்டீர்கள்' என்று பாராட்டினார். 

 

இந்த நிலையில்தான், தம்பி ராமையாவின் தம்பி மனைவி ராஜகுமாரி கரோனா தொற்று ஏற்பட்டு இறந்த தகவல் அறிந்த கொத்தமங்கலம் பசுமைப் புரட்சி ரமேஷ் என்ற இளைஞர், அய்யனார் கோயில் வளாகத்தில் ராஜகுமாரி பெயரில் மரக்கன்று நட்டு இன்று மண்ணுக்குள் விதையாக விழுந்த ராஜகுமாரி, விருட்சமாக எழுந்து நிற்பார் என்றார். சோகத்தில் இருக்கும் நடிகர் தம்பி ராமையைா, “என் உடன் பிறந்த தம்பி உமாபதிதான் என் வாழ்க்கையின் நிஜ ஹீரோ. தம்பி மீதான பாசத்தால்தான் என் மகனுக்கு உமாபதி என்று பெயர் வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் மிகப் பெரிய கொடூரமான நாட்கள். அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம். 

 

கடைசியில் ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு. இந்தக் கரோனா என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்துவிட்டேன். என் அன்பு உறவுகளே, அரசாங்க வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடியுங்கள், உயிரிழப்புகளைத் தவிருங்கள். வலியும், வேதனையும் உணர்ந்து சொல்கிறேன்” என்றார். எத்தனை சோகத்தில் இருப்பவர்களையும் தனது அசாத்திய பேச்சால், நடிப்பால், உடல்மொழியால் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த தம்பி ராமையாவின் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது. எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியவில்லையே என்ற அழுத்தம் அவர்களிடம் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.