Skip to main content

டாட்டூ குத்தியதால் பலியான கல்லூரி மாணவர்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

college student passes away by tattoo

 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி, பழனிசாமி தம்பதியின் மகன் பரத்(22). இவர், அரியலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற பரத், அங்கு கடை வீதியில் டாட்டூ போடும் இடத்திற்குச் சென்று தனது கழுத்தில் நங்கூரம் வடிவில் டாட்டூ குத்தியுள்ளார்.

 

பிறகு வீட்டுக்கு வந்த பரத், விவசாய வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பச்சை குத்திய அவரது கழுத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவருக்கு ஏற்பட்ட கட்டியை டாக்டர்கள அகற்றியுள்ளனர். அதற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தனது ஊருக்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மருந்துகள் தீர்ந்து போனதால் மீண்டும் வாங்குவதற்காக அரியலூருக்குச் சென்ற பரத் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பரத் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் கழுத்தில் டாட்டூ  குத்தியதால் அவரது உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடலில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக அவர் பலியானதாகத் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்