போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்க இறங்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கிய சம்பவம் அரிச்சல்முனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கர்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சனிக்கிழமை இரவில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து தங்கியுள்ளனர். ஞாயிறன்று காலை 8 மணியளவில் அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற மாணவர்கள் ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் விளையாடிய நிலையில், அங்கு காவலுக்கு இருந்த போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும், போலீசார் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் கடலில் இறங்கி விளையாட பரஜ்வால் என்ற மாணவன் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் கூக்குரலிட்டதையடுத்து அருகிலிருந்த மீனவர்கள் கடலில் குதித்து மாணவனை தேடியுள்ளனர். அப்பொழுதும் மாணவன் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 24 மணி நேரமாக மாயமான மாணவனை தேடியும் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தமிழக கடலோர காவல் குழும போலீசார் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவருடன் வந்த ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அழுது புலம்பி வருகின்றனர். இதனால் அரிச்சல்முனை பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகம் நிலவியது.