Skip to main content

இனிமேல் முன்பு போல் இருக்க முடியாது...! - அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியர்..!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

fg

 

தமிழகம் முழுக்க ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து அவர்களின் குறைகளைக் கோரிக்கை மனுவாகக் கொடுத்து வருகிறார்கள். அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் அதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அங்கேயே கொடுத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். இதுவே தமிழகம் முழுக்க நடக்கும். சாதாரண கிராமப்புற ஏழை எளிய மக்கள் அரசு நிர்வாகத்தை நடத்தும் மாவட்ட ஆட்சியர் அல்லது அவர் அந்த நாள் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தால் மாவட்ட வருவாய் அதிகாரி போன்ற உயர் அதிகாரிகளை நேரில் பார்த்து மனு கொடுப்பது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இப்படி மக்கள் கொடுக்கும் மனு மீது சட்ட முறைப் படி உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்தார்களா என்றால் சென்ற ஆட்சியாளர்கள் காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

 

இந்த நிலையில் தான் புதிய தி.மு.க. அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு மக்கள் தங்களது குறைகளைத் தீர்க்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிக மனுக்கள் வருவதை விட மக்கள் குறைகள் நிறைவு செய்யப்பட்டுக் குறைவான மனுக்கள் வருவதே சிறந்தது என ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.  இறையன்பு அவர்களின் உத்தரவை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் செயல்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி அறிவிப்பின் மூலம் தெரிய வருகிறது. 18 ந் தேதி ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அப்போது அவர் அங்கு இருந்த பல்வேறு துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள் பலரும்  சரிவரப் பதில் கூறவில்லை. இதைத் தொடர்ந்து கலெக்டர் அதிகாரிகளை எச்சரித்துப் பேசத் தொடங்கினார்.

 

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது என்று பதில் கூறினால் அதற்குத் தகுந்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் நன்றாக விவரம் தெரிந்த அடுத்த நிலை அலுவலர்களை அனுப்பி வைக்க வேண்டும். ஏதோ பெயருக்கு வந்தோமா போனமா என்றெல்லாம் இனிமேல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. பொதுமக்கள் 20 மனுக்கள் கொடுத்துள்ளார்கள், அதில் 15 மனுக்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை அளவில் கூறாமல் உண்மையாகவே அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்படும் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் பணியில் அனைத்து அரசு ஊழியர்களும் ஈடுபட வேண்டும். அரசு நிர்வாகத்தை நடத்துகிற நம்மைத் தானே மக்கள் நம்புகிறார்கள் அந்த மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற இனிமேலாவது செயல்படுங்கள்..." எனக் கறாராகக் கூறினார் கலெக்டர் கிருஷ்ணனூன்னி.

 

"ஏதோ இந்த மக்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் திருவிழாவுக்கு வருவது போல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு வருகிறார்கள் என்ற சிந்தனை தான் இதுவரை அரசு அதிகாரிகளிடம் இருந்தது. இனிமேல் அப்படி யாரும் இருக்க முடியாது தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என கலெக்டர் அறிவித்துள்ளதால் மனுவோடு வரும் மக்களைக் கண்டாலே பயம் கலந்த மரியாதை ஏற்பட்டுள்ளது அரசுத்துறை அலுவலர்களுக்கு" என்றார் வருவாய்த் துறை அலுவலர் ஒருவர். முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரின் உத்தரவுகள் செயல்படத் தொடங்கியுள்ளது நல்ல நம்பிக்கைதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.