
கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மற்ற துறை சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பதற்றத்தைத் தணிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தும் தலைமைச் செயலாளர், பின்னர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர்,. கமாண்டோ படையினர் என 1,500 பேர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.