Skip to main content

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி; பல் மருத்துவர் கைது

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

coimbatore businessman durkey apple buying incident involved dentist 

 

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் பறித்து சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). ஏற்றுமதி, இறக்குமதி தொழிலதிபரான இவருக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான அரவிந்த் (வயது 33) என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்நிலையில் தொழிலதிபரான ரமேஷுக்கு தொழிலில் உதவிடும் வகையில் துருக்கியில் இருந்து குறைந்த விலைக்கு கண்டெய்னர் மூலம் ஆப்பிள்களை வாங்கித் தருவதாக அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷும் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அரவிந்த்துக்கு பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.

 

பணத்தை வாங்கிய அரவிந்த், ரமேஷுக்கு கூறியபடி ஆப்பிள்களை அனுப்பவில்லை. மேலும் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்ததுடன், இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அரவிந்தின் மனைவி துர்கா பிரியா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் தொடர் விசாரணையில் மோசடி செய்த பணத்தைக் கொண்டு அரவிந்த் சினிமா நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படம் எடுக்க முயன்றது தெரியவந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.