Skip to main content

“துரோணாச்சாரியார்களின் காலம் அல்ல; ஏகலைவர்கள் காலம்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

cm Stalin's speech at Thirukkuvalai on breakfast scheme for students

 

காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். 

 

அதன் பின் பேசிய முதல்வர், “பலரது மகிழ்ச்சிக்குக் காரணமாக நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் மற்றொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதனால் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படப்போகிறது.  இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் இந்த திராவிட மாடல் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் உள்ள ஒரு மாநகராட்சியில் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்தேன். அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று திருக்குவளையில் செயல் வடிவமாக்கப்பட்டு இருக்கிறது. ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்’ என்று மணிமேகலை காப்பியம் சொல்கிறது. அப்படி திமுக அரசு இன்றைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இதற்கு நான் முதல்வராக மட்டுமில்லை, கலைஞரின் மகனாகவும் பெருமைப் படுகிறேன். இதை விட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்.

 

இந்தப் பள்ளி, பல பள்ளிகளையும் பல கல்லூரிகளையும் உருவாக்கிய கலைஞர் படித்த பள்ளி. நிச்சயமாக அவருக்குப் பள்ளியில் படிக்கும் போது முதல்வராக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருந்திருக்காது; அவரின் தமிழ்ப் பற்றும், எழுத்தாற்றலும், சிந்தனையும் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்து முதல்வராக்கியுள்ளது. அந்த பெருமை திருக்குவளை பள்ளிக்கும், திருவாரூர் பள்ளிக்கும் தான் சேரும். திருக்குவளையில் பிறந்து ஆரம்பக்கல்வி கற்று, திருவாரூரில் வளர்ந்து  சளைக்காமல், விடா முயற்சியாலும், போராட்டங்களாலும் வெற்றி சிகரத்தைத் தொட்டவர் கலைஞர். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக் கூடிய இடம் சலுகைகளால் கிடைக்காமல் போராட்டத்தால் தான் கிடைக்க வேண்டும் சொன்னார் கலைஞர். அப்படி கடற்கரையில் ஓய்வெடுத்து வரும் அந்த இடத்தை கூட போராடிப் பெற்றவர்தான் கலைஞர். 

 

சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் பள்ளிக்கு ஒரு விழாவிற்காகச் சென்றிருந்தேன். அப்போது, மாணவிகளிடம்  காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டேன். பெரும்பாலான மாணவிகள் காலையில் சாப்பிடவில்லை என்றனர். ஒரு சிலர் அம்மா பள்ளியில் போய் சாப்பாடு சாப்டுக்கோ என்று சொன்னதாகவும், சிலர் காலையில் எங்கள் வீட்டில் சமைக்கவில்லை என்றும் கூறினார்கள். அன்றுதான் மாணவர்களுக்குக் காலையில் உணவு வழங்குவது என்று முடிவெடுத்தேன். அதிகாரிகளிடம் கூறியபோது நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களைச் சொன்னார்கள். ஆனால் இதை விட வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது என்று கட்டாயப்படுத்தி விரைவாகத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறி இன்றைக்குச் செயல்படுத்தி விட்டோம்.  காலை உணவு கிடைக்க வேண்டும்; ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கக் கூடாது; ரத்த சோகையைத் தவிர்க்க வேண்டும் எனப் பல்வேறு காரணங்களுக்காகத்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் தமிழகம் என்றுமே முதன்மை இடத்தில் இருக்கிறது. 

 

அந்த காலத்தில் அரசர் குலம் மட்டுமே கற்றுக்கொண்ட வில்வித்தையை வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கற்றுக்கொண்டதற்காக அவரது கட்ட விரலைக் காணிக்கையாகப் பெற்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்தான் இருந்தார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த சமூகநீதி பாதையில் அனைத்து அறிவையும், அனைத்து சமூகத்தினருக்கும் கொடுக்கும் அறிவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையிலும் தேசியக் கல்விக் கொள்கை, நீட் என்கிற பேரில் தடுப்புச் சுவர்கள் போடுகிற துரோக ஆச்சார்யர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏகலைவன் கட்ட விரல்களைக் கொடுத்தது எல்லாம் அந்தக் காலம். இது கலைஞர் உருவாக்கி தந்திருக்கக்கூடிய காலம். இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவர்கள் காலம். அதனால் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படியுங்கள் படிப்பு மட்டும்தான் தமது சொத்து.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.