Skip to main content

சாலை விபத்தில் போக்குவரத்துக் காவலர் உயிரிழப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
CM MK Stalin obituary for traffic police incident in Manali Ennore Expressway

சென்னை, மணலி - எண்ணூர் விரைவுச் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னை, எண்ணூர் காவல் நிலையத்தில், போக்குவரத்துப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தவர் லக்ஷ்மணன் (வயது 37). இவர் இன்று (05.10.2024) காலை சுமார் 06.00 மணியளவில் அம்பத்தூரில் நடைபெறவிருந்த காவல்துறை பயிற்சி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காகச் சென்னை,மணலி - எண்ணூர் விரைவுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதிய விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று காலை 08.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

போக்குவரத்துக் காவலர் லக்ஷ்மணனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். லக்ஷ்மணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்