Cleaners besiege corporation office!

Advertisment

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 6ந் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒன்று திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

பிறகு அவர்கள் கூறும்போது, "ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பொது சுகாதார பணியில் 1,700 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் 1,200 பேர் நிரந்தரம் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தனியார் வசம் கொடுக்கக் கூடாது.

தற்காலிகமாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள், 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டி.பி.சி. பணியாளர்கள் குப்பைகளைச் சேகரித்தல், தெருக்கள் சாக்கடைகள் சுத்தம் செய்தல், குப்பைக் கிடங்குகளில் அரவை இயந்திரங்களில் வேலை செய்தல் என்று பணியாற்றும் அவர்களுக்கு இதர பகுதி ஊழியர்கள் போலவே தினக்கூலியாக ரூபாய் 676 கொடுக்க வேண்டும்.

Advertisment

ஈரோடு மாநகர் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. வீடுகளும் கடைகளும் அதிகரித்துள்ளன. இதற்கு ஏற்ப தொழிலாளர்கள் இப்போது இல்லை அதனால் தற்போதுள்ள பணியாளர்களுக்கு கடும் வேலைப் பளு உருவாகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே காலியான பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும். தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அரசாணை எண். 62/2017ன் படி 1-4-2021 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரூ.17 சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும்" என்றனர்.