Skip to main content

12ஆம் வகுப்பு வினாத்தாள் லீக்! இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை! 

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Class 12 Quiz Paper Leak Action on two private schools!

 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் லட்சக் கணக்கான மாணவ – மாணவிகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு இந்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக திருப்புதல் தேர்வு நடக்கவுள்ளது. இந்த திருப்புதல் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரேமாதிரியாக நடத்துகிறது பள்ளிக்கல்வித்துறை. இதற்காக வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அவை அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பபப்ட்டன. இந்த வினாத்தாள்கள் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் தனிஅறையில் வைத்து சீல்வைக்கப்பட்டன.

 

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் கணக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பாக வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் அதிர்ச்சியான கல்வித்துறை விசாரணை நடத்தியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இந்த வினாத்தாள் வெளியானது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் விசாரணை நடத்தினார். அதன்படி போளுர் நகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசியில் உள்ள இரு தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பிய வினாத்தாள்கள்தான் லீக்கானது எனத் தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுகள் கட்டுப்பாட்டு பிரிவின் இணை இயக்குநர் பொன்.குமார் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்திலும், செய்யார் கல்வி மாவட்டத்திலும் நேரடி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில் பிப்ரவரி 14ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மூலம் வெளியான தகவலில், இந்த இரண்டு பள்ளிகளில் இருந்துதான் வினாத்தாள் வெளியாகியுள்ளது, இந்த பள்ளிகளின் மீதும், வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.