Skip to main content

நாகூரில் மீனவர்களுக்குள் மோதல்; சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு! 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Clash between fishermen in Nagore;

 

நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆவேசமடைந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களைச் சாலையில் கொட்டிப் போராட்டம் நடத்தினர்.

 

நாகை மாவட்டம், நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்துவிட்டுக் கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பும் மீனவர்கள் தடுத்துள்ளனர். மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். 

 

இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள், திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களைச் சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


இதையடுத்து அங்கு வந்த டி.எஸ்.பி சரவணன், நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், திடீரென டீசலை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 


அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்குச் சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.